48:02:05
யாமவேதம் காண்டம்-48, மண்டலம்-2, நாள்வாசகம்-5:
“அண்டபேரண்டங்களிலிருந்து வந்திட்ட அருளுலகத்தவர்கள் அனைவருமே இந்துமாக் கடலின் மையத்தில் ஏழாயிரம் கல் பரப்பளவிற்கு விரிந்து பரந்து சூரியன் கதிர்கள் போல் எண்ணற்ற நிலக் கீற்றுக்களைப் பெற்றிட்டதும், இளமை முறியாத நிலப்பரப்புக்களை மிகுதியாகப் பெற்றிட்டதுமான குமரிக் கண்டத்து பயிரினங்களுக்கும், உயிரினங்களுக்கும் ஈசர்களாகத் தோன்றிட்ட மணீசர்களை விலங்குகளோடு விலங்குகளாக வாழும் நிலையிலிருந்து மாற்றுவதற்கு அரும்பாடு பட்டிட்டார்கள். அவர்களுடைய முயற்சிகள் இந்துவேத நூல்களையும், இந்துமத நூல்களையும் அனாதிக் காலத்திருந்த (800) எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளிலும்; அண்டபேரண்ட அருளுலக ஆட்சிமொழியும் அருளூறு அமுதத் தெய்வீகச் செம்மொழியுமான முத்தமிழ் மொழியில் அருளப்பெற்றுள்ளது போலவே; ஒலிநயமும், பொருள்நயமும் கெடாமல் எடுத்து ஓதப்பட்டும் கூட 4,85,920 ஆண்டுக் காலமாகியும் அவர்களைத் திருத்த முடியவில்லை, பண்படுத்த முடியவில்லை; அவர்களை இந்துக்களாக்க முடியவில்லை. அதற்குக் காரணம், அந்தந்த மொழிவழி இனத்தவர்கள், தங்கள் தங்களுடைய நாட்டுக்குரியவர்கள் தோற்றுவித்திட்ட வேதங்களையும் வேதமதங்களையும் மட்டுமே உலகம் முழுவதும் ஆளுதற்குரியனவாக்கிட எடுத்துக் கொண்ட முரட்டுத் தனமான வறட்டுப் பிடிவாத நிகழ்ச்சிகள்தான். அவற்றை யெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் இப் புவிப்பரப்பு முழுதும் உள்ள மானுட இனத்தார்களுக்குக் காலங்கள் தோறும் கடவுள்களே தோன்றி தேவையான செய்திகளையும், செயல் நடைமுறைகளையும் மட்டும் சுருக்கமாக எடுத்துக் கூறி உதவிடுவதற்குரிய இருக்கு வேதமான இந்துவேதத்தை இம் மாஞாலத்தின் மூலவேதமாக, பொதுவேதமாக, முதல்வேதமாக ஆதிசிவனார் மூலமாக அருளினார்கள் அண்டபேரண்டமாளும் மூலப் பதினெண்சித்தர்கள். இருந்தபோதிலும் இருக்குவேதமான இந்துவேத உரைக்கோவை வாசகங்களும், வாக்குகளும், வாக்கியங்களும் அருளிய ஒன்பது வகைப்பட்ட கலைகளும், ஐந்து வகைப்பட்ட ஞானங்களும், மானுடரால் முழுமையாக 1)தெரிந்து, 2)அறிந்து, 3)ஆராய்ந்து, 4)புரிந்து, 5)தெளிந்து, 6)உணர்ந்து, 7)நம்பி, 8)ஏற்று, 9)ஒப்புக்கொண்டு நடைமுறைப் படுத்தி நற்பேறுகளைத் துய்க்க முடியவில்லை. அதனாலேயே அருளுலகில் உள்ள 8,84,736 வகைப்பட்ட கடவுளர்களையும், அவர்களுடைய வடிவங்களையும், வாழ்வியல்களையும்; அவர்களை இம்மண்ணுலகுக்கு வரவழைக்கக் கூடிய வழிவகைகளையும், அவர்களைச் சந்திக்க, அருளுலகிற்கே சென்றிடக் கூடிய நெறிகளான 1)பூசைநெறி, 2)வணங்குநெறி, 3)வழிபடு நெறி, 4)கும்பிடுநெறி எனும் நான்கு வகை நெறிகளையும்; முறைகளான 1)அழுகைமுறை, 2)தொழுகைமுறை, 3)எள்ளல் முறை, 4)ஏசல்முறை எனும் நான்கு வகை முறைகளையும்; இவற்றிற்குரிய நாற்பத்தெட்டு வகைக் கருவறைகளையும், நாற்பத்தெட்டு வகை வழிபாட்டு நிலையக் கருவறைகளையும், நாற்பத்தெட்டு வகை கோயில் மூலக் கருவறைகளையும்; இவற்றால் உருவாகிடும் 192 வகைப்பட்ட உண்ணாழிகளையும்; நாற்பத்தெட்டிற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான கோயில்களையும்; இவற்றில் 1)குடும்ப ஆண்டவர்கள், 2)குலதெய்வங்கள், 3)கிராமதேவர் தேவதைகள், 4)நாட்டுக் கடவுளர்கள் எனும் நான்கு வகையினரும் எழுந்தருளி அருள் வழங்கிடுவதற்குரிய வகைவகையான உருவங்களையும், வடிவங்களையும், வடிவமைப்புக்களையும் உயிர்ப்புச் செய்வதற்கும், புத்துயிர்ப்புச் செய்வதற்கும் உரிய குடமுழுக்குப் பூசைவிதி நூல்களையும், இவற்றைச் செயலாக்குவதற்குத் துணைபுரியும் இருபத்திமூன்று வகைப்பட்ட காயந்திரிகளையும்; ஓமம், ஓகம், யாகம், யக்ஞம், வேள்வி எனும் ஐந்தீ வேட்டலையும்; கந்தழிநிலை, வள்ளிநிலை, கொடிநிலை எனும் முத்தீ ஓம்பலையும் வழங்கிடும் இருக்கு வேதமான இந்துவேத வாசகங்கள் யாம வேதமாக வடிவப்படுத்தப் பட்டது. இருந்தும், இந்த யாமவேதம் நான்கு வேதங்களும் ஓதுவதற்கென வகுக்கப்பட்ட காலவிதிப்படி, இரவுக் காலத்தில் மட்டும் ஓதப்படாமல் எல்லாக் காலங்களிலும் ஓதப்படும் பொழுது விளையக் கூடிய அழிவுகளையும், இழிவுகளையும் விட; இந்துவேதமான இருக்குவேதம் வளர்க்கக் கூடாது என்று எச்சரிக்கின்ற ஞானம், அகஞானம், புறஞானம், விஞ்ஞான, மெய்ஞ்ஞானம் எனும் ஐந்து ஞானங்களில் நான்காவது ஞானமான விஞ்ஞானத்தை வளர்ப்பதால், வளர்த்திடுவதால் மிகப்பெரிய பேரழிவுகளும், பேரிழிவுகளும் விளைந்திடும், விளைந்திடும், விளைந்திடும்.”